திருமால் திருத்தலங்களில் திரு அத்யயன திருவிழா
பகல்பத்தில் முதலாயிரமும் பெரிய திருமொழியும் ஸேவிப்பர். இராப்பத்தில் திருவாய்மொழியும் இயற்பாவும் ஸேவிப்பர். இராப்பத்து விழா திருமங்கை ஆழ்வாரால் திருவரங்கத்தில் தொடங்கப்பெற்றது. பகல்பத்து விழா நாதமுனிகளால் திருவரங்கத்தில் தொடங்கப்பட்டது. இவ்விழாக்கள் தொடங்கப்பெற்ற வரலாற்றை கோயிலொழுகு என்ற நு}ல் விரித்துரைக்கிறது. மார்கழி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி தொடங்கிப் பத்து நாட்கள் திருவரங்கன் திருமுன்பு வேதங்களைப் பாராயணம் செய்யும் முறை முன்காலத்தில் இருந்தது. இதனைக் கண்ணுற்ற திருமங்கையாழ்வார் திருவாய்மொழியும் அவ்வாறே ஸ்ரீவைஷ்ணவர்களால் எம்பெருமான் திருமுன்பு ஸேவிக்கப்படவேண்டும் என்று விரும்பி எம்பெருமானைப் ப்ரார்த்திக்க, திருவரங்கனும் மிகவும் உகந்தருளி
‘அப்படியே வேதஸாம்யம் அநுக்ரஹித்தோம் அத்யயன உத்ஸவத்திலே வேத பாராயணத்தோடு திருவாய் மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள்” என்று திருவாய் மலர்ந்தருளினார். திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வார் அர்ச்சைத் திருமேனியை மதுரகவிகள் மூலமாக எழுந்தருளச்செய்தார். திருவரங்கரும் ஆழ்வாரை ‘நம்மாழ்வார்” என்று திருநாமம் சார்த்திச் சிறப்பித்தார். மதுரகவிகளும் நம்மாழ்வாரின் ஸ்தானத்தில் திருவாய்மொழியைத் தொடங்கி தேவகானத்திலே இசையுடன் பாடி அபிநயத்துடன் விண்ணப்பம் செய்தார். மதுரகவிகளே திருவாய்மொழி விண்ணப்பம் செய்பவராக இருந்து அம்மரபினைத் தோற்றுவித்தார்.