
கோவை : ""வரலாற்றில் எல்லாருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதை உலகத்தைப் படிக்க வைப்பது நமது கையில்தான் உள்ளது,'' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
அவரது 80வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் "பசும்புலரி' அமைப்பின் சார்பில் நடந்த, "பாதையெங்கும் பசுமை' நிகழ்ச்சியில், பல ஆயிரம் மாணவ, மாணவியர் மத்தியில் அவர் பேசியதாவது:உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பறக்க வேண்டுமென்ற உணர்வு இருக்க வேண்டும். வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய அது வழிவகுக்கும். நீ யாராக இருந்தாலும், எந்த கிராமத்தில் இருந்தாலும், உன்னால் வெற்றியடைய முடியும். நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உழைப்பால் அதை ஒரு நாள் அடைய முடியும்.எண்ணங்கள் பெரிதாக இருந்தால், செயல்கள் பெரிதாக இருக்கும். செயல்கள் பெரிதாக இருந்தால், வாழ்க்கை உயர்வாகும் என்பதை வள்ளுவர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார். உங்கள் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்க வேண்டும். அதை அடைய உழைப்பு முக்கியம்.
உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் விடாமுயற்சி இருந்தால், வெற்றி உங்களை வந்து சேரும். வரலாற்றின் பக்கங்களில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை உலகம் படிக்க வைப்பது, நமது கையில்தான் உள்ளது. எந்த மாயவலையிலும் விழமாட்டேன் என்ற உறுதி இருந்தால், வரலாற்றுப் பக்கத்தில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள்.வாழ்வில் வெல்ல 5 விஷயங்கள் அவசியம். முதலில் லட்சியம் வேண்டும். அதை அடையக் கூடிய அறிவைத் தேடிப்பெற வேண்டும். அதற்கு கடும் உழைப்பு வேண்டும். பிரச்னைகளைக் கண்டு பயப்படக் கூடாது. பிரச்னைகளைத் தோல்வியடையச் செய்து, வெற்றியடைய வேண்டும். விடாமுயற்சி வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஒழுக்கம் வேண்டும்.குடும்பத்துக்கும், நாட்டுக்கும், உலகிற்கும் நல்லதொரு அங்கமாக இருப்பேன் என்ற உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் சமூகத்தில் பொறுப்புள்ள மனிதர்களாக மாற வேண்டும்; நான் அடுத்த முறை வரும்போது, கோவையில் நிறைய மரங்களையும், ஊருணிகளையும் பார்க்க வேண்டும்; அதுதான் எனது விருப்பம்.இவ்வாறு, அப்துல் கலாம் பேசினார்.
ஒரே ஒரு அரசியல்வாதி!மாணவ, மாணவியரிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்த கலாம், இடையிடையே பல கேள்விகளைக் கேட்டு, "உங்களில் யார் டாக்டராக, இன்ஜினியராக, சயின்டிஸ்ட் ஆக விருப்பம்?' என்று தனித்தனியாக கேள்வி கேட்டார். இறுதியாக, "உங்களில் யாருக்கு அரசியல்வாதி ஆக ஆசை?' என்று அவர் கேட்டபோது, ஒரே ஒரு சிறுவன் மட்டும் கை தூக்கினான்.அந்த சிறுவனிடம் "மைக்'கைக் கொடுக்கச் சொல்லி, "நீ அரசியல்வாதியானால் ஊருக்கு என்ன செய்வாய் என்று சொல்,'' என்றார் கலாம். அதற்கு அந்தச் சிறுவன், "மக்களுக்கு நல்லது செய்வேன்' என்றான். அதற்கு, ""என்ன செய்வேன்னு சொல்லாமல், அரசியல் தலைவர் மாதிரியே பேசுறியே,'' என்று அப்துல் கலாம் கூற, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
